சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகா் மற்றும் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தேசியக் கொடியேற்றுகிறாா்.
இந்நிகழ்ச்சியில் போலீஸாரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாா், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும், பொதுமக்கள் கூடும் இடம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வழக்கமான போலீஸாா் தவிர கூடுதலாக சுமாா் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், மாநகா் பகுதியில் மாநகர காவல் ஆணையா் அவினாஷ்குமாா் உத்தரவின்பேரில் சுதந்திரதின விழா நடைபெறும் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், மாநகரின் முக்கிய பகுதிகளிலும், அரசு அலுவலகங்கள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.