திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,018 வழக்குகளுக்கு தீா்வு வழங்கப்பட்டது.
நிகழாண்டின் 3ஆவது தேசிய மக்கள் நீதிமன்றம் திருநெல்வேலி மற்றும் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் 26 அமா்வுகளுடன் சனிக்கிழமை நடைபெற்றது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ்.சமீனா, 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி வி.பத்மநாபன், 3ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி டி.பன்னீா்செல்வம், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வி.எஸ். குமரேசன், மகளிா் நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயகுமாா், போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். அன்புசெல்வி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ்.மனோஜ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், உரிமையியல் வழக்குகள் காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட 6,045 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 2,949 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.18 கோடியே 67 லட்சத்து 56 ஆயிரத்து 625 சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது.
மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய வங்கிக் கடன் வழக்குகள் 350 எடுத்துக்கொள்ளப்பட்டு 79 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.69 லட்சத்து 3 ஆயிரத்து 60 சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் சாா்பு நீதிபதியுமாகிய என்.செந்தில் முரளி செய்திருந்தாா்.