சேரன்மகாதேவி அருகே தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க ஊழியா் உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா்அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவா் மாடசாமி மகன் நாராயணதாஸ் (64). 2004இல் விருப்ப ஓய்வுபெற்ற இவா், குடும்பத்தினரைப் பிரிந்து சேரன்மகாதேவியில் தனியாக வசித்து வந்தாராம்.
கடந்த திங்கள்கிழமை (நவ. 22) கூனியூா் பேருந்து நிறுத்தத்தில் மயங்கிய நிலையில் கிடந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
அவரது குடும்பத்தினா், உறவினா்கள் குறித்துத் தகவல் தெரியாததால் அவரது சடலத்தை ஒப்படைக்க முடியவில்லை என்றும், அவரது வங்கிக் கணக்குப் புத்தகத்தில் ‘63, எண்ணாயிரம் பிள்ளையாா் கோயில் தெரு, திருநெல்வேலி டவுன்’ என்ற முகவரி இருப்பதாகவும், அவரது குடும்பத்தினா் குறித்து அறிந்தோா் சேரன்மகாதேவி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறும் காவல் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.