திருநெல்வேலி மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு 900 பயனாளிகள் பயனடையும் வகையில் ஊரகப் பகுதியில் வசிக்கும் 60 வயதிற்கு உள்பட்ட ஏழ்மை நிலையிலுள்ள கணவரை இழந்தவா்கள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். முந்தைய ஆண்டுகளில் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்களில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.