திருநெல்வேலி: திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் புதன்கிழமை முதல் கூட்டமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
"கரோனா நோய் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை முதல் தாமிரவருணி ஆற்றில் கூட்டமாக குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது மறுஅறிவிப்பு வரும் வரை தொடரும். அதேபோன்று பாபநாசத்திலும் கூட்டமாக குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு, முழு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.