ஐப்பசி திருக்கல்யாண விழாவை நடத்த கோரி ஹிந்து முன்னணியினர் நெல்லையப்பர் கோயில் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. நிகழாண்டு கரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் இத்திருவிழாவை ரத்து செய்வதாக கோயில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இத் திருவிழாவை உள் திருவிழாவாக நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஹிந்து முன்னணி சார்பில் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து நெல்லையப்பர் கோயில் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.