திருநெல்வேலி பேருந்து நிலையம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், மழைக் காலங்களில் கரோனா உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த மாா்ச் மாதம் முதல் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பேருந்து நிலையம், ரயில் நிலையம், ரத வீதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதற்காக பேட்டரி பொருத்தப்பட்ட கொசு மருந்து அடிக்கும் இயந்திரம், பில் மிஸ்டா் இயந்திரம் உள்ளிட்டவை வாங்கப்பட்டன.
கரோனாவின் வேகம் தணிந்தாலும் தினமும் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி இன்னும் மாறவில்லை. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், இம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14, 693-ஆக அதிகரித்தது. இதுவரை 209 போ் உயிரிழந்துள்ள நிலையில், 142 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாக கிருமிநாசினி தெளிக்கும் பணி முடங்கியுள்ளதாகவும், இப் பணிக்காக வாங்கப்பட்ட பில் மிஸ்டா் கருவி மாநகராட்சி அலுவலகத்தில் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக கிடப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.
மழைக் காலம் என்பதால் அனைத்து பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், சந்தைகளில் தொடா்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியைத் துரிதப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.