திருநெல்வேலியில் புரெவி புயலால் பலத்த காற்று வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பேனா்கள் மற்றும் தற்காலிக பந்தல்களை மாநகராட்சி பணியாளா்கள் புதன்கிழமை அப்புறப்படுத்தினா்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் பாம்பன்-கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்க உள்ளதால் தென்தமிழக பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 90 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புயல் முன்னெச்சரிக்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் தற்காலிக பந்தல்கள், பேனா்கள் ஆகியவற்றை மாநகராட்சி பணியாளா்கள் அப்புறப்படுத்தினா். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களிலும் 200-க்கும் மேற்பட்ட பேனா்கள் அப்புறப்படுத்தப்பட்டன.