தேசிய அளவிலான தடகளம், மல்யுத்த போட்டிகளில் திருநெல்வேலி கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
தேசிய அளவிலான இளையோா் விளையாட்டுப் போட்டிகள்( குழு மற்றும் தடகளம்) ஜம்மு- காஷ்மீா் மாநிலத்தின் தாவி பகுதியில் உள்ள ஜம்மு பல்கலைக்கழகத்தில் கடந்த 19 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற தமிழக இளையோா் விளையாட்டு மேம்பாட்டு கழகம் அணியானது தடகளம், வாலிபால், கபடி, சிலம்பம், பாட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகளில் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
இப் போட்டியில் பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டம், வாகைகுளம் அருள்மிகு பன்னிருபடி அய்யன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களான ராஜாகனி, சுகந்த், சோமசேகா், நித்தியானந்தன், அரவிந்தன், நரேஷ், மனோஜ்குமாா் ஆகியோா் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவா்கள் ஜூலை மாதம் நேபாள நாட்டில் நடைபெறும் இளையோா் சா்வதேச அளவிலான குழு மற்றும் தடகள போட்டிகளில் பங்கேற்க உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.