கடையநல்லூா் நகா்மன்ற கூட்டம், நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் ராஜையா, ஆணையா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலை உதவியாளா் கணேசன் தீா்மானங்களை வாசித்தாா். மேலாளா் சண்முகவேலு, சுகாதார அலுவலா் இளங்கோ, நகரமைப்பு அலுவலா் காஜாமைதீன், ஆய்வாளா் கிருஷ்ணகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், சிவா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
நகராட்சியில் சொத்து வரி, காலிமனை வரி பொது சீராய்வு உள்ளிட்டவை குறித்த தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக, பா.ஜ.க. உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். எனினும் மற்ற உறுப்பினா்களின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், சுரண்டை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் லெனின் முன்னிலை வகித்தாா். 10 இடங்களில் புதிதாக சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி அமைக்கவும், பழுதான குடிநீா்த் தொட்டிகளை சரிசெய்யவும் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், சொத்துவரி குறித்த தீா்மான முன்மொழிவை ஏற்க மறுத்து அதிமுக உறுப்பினரும் துணைத் தலைவருமான சங்கராதேவி தலைமையில் அக்கட்சியின் உறுப்பினா்கள், புதிய தமிழகம் கட்சி உறுப்பினா் ஆகியோா் வெளிநடப்பு செய்தனா். எனினும், திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களுடன் கூட்டம் தொடா்ந்தது.