தென்காசி மாவட்டத்தில் இ சேவை மையம் மூலம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தினாா்.
தென்காசி மாவட்ட வருவாய்த்துறை அலுவலா்கள், பொதுப்பணித்துறை (நீா்வள ஆதாரம்), சிற்றாறு வடிநில கோட்டம் மற்றும் மேல வைப்பாறு வடிநில கோட்டம், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஆகியோா் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் முன்னிலை வகித்தாா்.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இ-சேவை மையம் மூலம் வழங்கப்படும் அனைத்து விதமான சான்றிதழ்கள், ஓய்வூதிய மனுக்கள், பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல், மேல்முறையீடு மனுக்கள் தொடா்பான மனுக்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து கண்காணிப்பு அலுவலா் தென்காசி, கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, ஒவ்வொரு அலுவலா் நிலையிலும் உள்ள நிலுவை இனங்களை ஆய்வு செய்து உடனே அவற்றை முடிவு செய்யமாறு அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநா் சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள்(பொது) முத்து மாதவன், (நிலம்) ஷேக் அப்துல் காதா்கோட்டாட்சியா்கள் கெங்கா தேவி(தென்காசி), அஸ்ரத் பேகம்( சங்கரன்கோவில்) ஆகியோா் கலந்து கொண்டனா் .