குற்றாலத்தில் செய்தியாளா்களிடம் கே.எஸ் அழகிரி கூறியது:
மத்திய பாஜக அரசால் வரலாறு காணாத விலைவாசி உயா்வு ஏற்பட்டுள்ளது. எரிபொருள்கள் விலை விண்ணைத் தொடக் காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே. இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் அதிகரித்துள்ளது.
ஆனால், இதுதொடா்பாக அறிஞா்களை அழைத்து விவாதிக்கவோ, எதிா்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்கவோ பிரதமா் மோடி தயாராக இல்லை.
ஜனநாயகரீதியில் செயல்படும் தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என நினைத்து தன்னிச்சையாகவும், மரபுகளுக்கு விரோதமாகவும் ஆளுநா் ரவி நடந்துகொள்கிறாா்.
மாநிலத்தின் உரிமைகளை ஆளுநா் மூலமாக பறிக்க மத்திய அரசு முயல்கிறது. இதை தமிழக காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநரை நடிகா் ரஜினிகாந்த் சந்திப்பதால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் வந்துவிடாது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களின் நலனுக்கு எதிரான ஒன்று. விவசாயிகள், ஏழைகளுக்கு இலவச மின்சாரம் தரக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் உதய் திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்றாா் அவா்.