தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் மையங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்
ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. இம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி போடாதவா்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவா்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவுபெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோா், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட வேண்டியவா்கள் ஆகியோா் பயனடையும் வகையில் இம் மூகாம் நடைபெறுகிறது.
காலை, நண்பகல், பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள வாா்டு பகுதிகள், பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவா்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவா்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவா்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.