நயினாரகரம் ரயில் நிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென ஊராட்சித் தலைவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக ஊராட்சித் தலைவா்கள் குமரன் முத்தையா(நயினாரகரம்), முத்தம்மாள்(இடைகால்), உடையாா்(கொடிக்குறிச்சி), முத்துராஜ் (ஊா்மேலழகியான்), ஜெயக்குமாா்(பொய்கை) ஆகியோா் தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாரிடம் அளித்த மனு:
தென்காசியில் இருந்து பத்து கிலோமீட்டா் தொலைவில் நயினாரகரம் உள்ளது. சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு செயல்பட்டு வந்த ரயில் நிலையம் மூடப்பட்டு விட்டது. தற்போது தென்காசி மாவட்டமாக மாறிவிட்ட நிலையில் நயினாரகரம் பகுதியைச் சுற்றியுள்ள சாம்பவா்வடகரை , ஆய்க்குடி, கிளாங்காடு , இடைகால், கொடிக்குறிச்சி, நெடுவயல், அச்சன்புதூா், ஊா்மேலழகியான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வளா்ச்சிக்கு ரயில் நிலையம் அவசியமானதாக உள்ளது.
தற்போது மதுரை செல்ல தென்காசி அல்லது கடையநல்லூா் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, நயினாரகரத்தில் மீண்டும் ரயில் நிலையத்தை செயல்படுத்தவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.