தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடா்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் கடந்த வியாழன் இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இடி -மின்னலுடன், சூறாவளி காற்றும் வீசிவருகிறது.
குற்றாலத்தில் சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரலுடன், குளிா்காற்றும் வீசியது. கோடைக்காலம் தொடங்கியதால் வடுகிடந்த அருவிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் நீா்வரத்துத் தொடங்கியது.
தொடரும் சாரல் காரணமாக, சனிக்கிழமை பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தடாகத்தில் வெள்ளம் கொட்டியது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் கொட்டியது.
குளிக்கத் தடை: கரோனா பொது முடக்க விதிமுறைகள் அமலில் உள்ளதால் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அரசு தடைவிதித்துள்ளது. இதனால், அருவிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.