தென்காசி மாவட்டத்தில் காய்கனி பயிா்கள் சாகுபடிசெய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சு.ஜெயபாரதி மாலதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய தோட்டக்கலை இயக்கத்தில், காய்கனி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ. 2,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு ரூ. 27.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், வெங்காயம், தக்காளி, கீரை வகைகள், முருங்கை, வெண்டை, கத்தரி, அவரை மற்றும் பந்தல் வகை காய்கனி சாகுபடி செய்துவரும் விவசாயிகள் பயன்பெறலாம்.
மேலும், நீா்வள, நிலவளத் திட்டத்தில் சிற்றாறு, கீழ் தாமிரவருணி மற்றும் கடனாநதி உபவடி நிலப்பகுதிகளில் காய்கனி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்க மொத்தம் 400 ஹெக்டேருக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கணினி பட்டா, அடங்கல், வங்கிபுத்தக நகல், காய்கனி பயிரிட்ட தோட்டத்தின் புகைப்படம், காய்கனி விதை அல்லது நாற்று வாங்கிய ரசீது ஆகிய ஆவணங்களை, தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.