சுரண்டை: சுரண்டையில் அறைகுறையாக நிற்கும் வாறுகால் பணியால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சுரண்டை சங்கரன்கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நடுவில் சென்டர் மீடியன் மற்றும் சாலையோரம் இருபுறமும் வாறுகால் வசதியுடன் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்றது.
சுரண்டை புதிய காய்கனி சந்தை முதல் அண்ணா சிலை வரை சாலையின் நடுவில் சென்டர்மீடியனுடன் 4 வழி சாலை அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், இருபுறமும் கழிவுநீர் செல்வதற்கு வாறுகால் அமைக்கும் பணி நிறைவுபெறவில்லை.
சாலை அமைத்து 6 மாதம் முடிந்த நிலையில் வாறுகால் பணி மட்டும் அறைகுறையாக கிடப்பதால் தினசரி சந்தையில் தொடங்கும் வாறுகால் முக்கால் பாகத்துடன் அப்படியே விடப்பட்டுள்ளதால், கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாயிலேயே தேங்கியுள்ளது.
இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் இந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி நோய்கள் ஏற்படவும் காரணமாகிறது. சுகாதாரத்தைப் பேண அமைக்கப்படும் வாறுகால், பணி முழுமையடையாததால் அதுவே சுகாதார கேட்டிற்கும் காரணமாக அமைந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ள வாறுகால் பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.