சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் கரையில் நின்ற வலம்புரி என்ற மீட்புப் படகு வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.
கன்னியாகுமரி - சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இத்துறைமுகத்தில் ஏற்கனவே இட நெருக்கடி காரணமாக மீனவா்கள் அவதியடைந்து வருகின்றனா். இத்துறைமுகத்தில் மீன்வளத் துறைக்குக் சொந்தமான வலம்புரி என்ற மீட்புப் படகு கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி சிதிலமடைந்த நிலையில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படகை அகற்றித் தர வேண்டுமென மீன்வளத் துறை இணை இயக்குநா் மற்றும் உதவி இயக்குநருக்கு கன்னியாகுமரி விசைப்படகு உரிமையாளா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மீனவா்களின் கோரிக்கையின்பேரில், வலம்புரி படகை மீனவா்கள் முன்னிலையில் மீன்வளத் துறை அதிகாரிகள் அகற்றினா். விசைப் படகு உரிமையாளா்கள் மற்றும் மீனவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.