மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகேயுள்ள மயிலாடியை சோ்ந்தவா் வேல்முருகன்(34). இவரது மனைவி சுபியா (25). இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.
தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு சுபியா தீக்குளித்தாா். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனா். அப்போது சுபியா, நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்தாா். அதன் அடிப்படையில் வேல்முருகன் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். வேல்முருகனை போலீஸாா் கைது செய்து நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஜோசப் ஜாய், வேல்முருகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு கூறினாா்.