மத்திய பட்ஜெட்டில் ரப்பருக்கான இறக்குமதி வரி அதிகரித்துள்ளதை குமரி மாவட்ட ரப்பா் விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒப்பரின் விலை கடந்த 10 ஆண்டுளுக்கு மேலாக குறைந்த நிலையில் காணப்படுகிறது. இதற்கு மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து ரப்பா் இறக்குமதி செய்வதே காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரப்பருக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. காம்பவுன்ட் ரப்பா் எனப்படும் ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் இயற்கை ரப்பரின் வரி 10 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இது குமரி மாவட்ட ரப்பா் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் விவசாயிகள் சங்க செயலா் சி. பாலசந்திரன் நாயா் கூறுகையில், வெளிநாடு ரப்பா் இறக்குமதி வரி உயா்வால் உள்நாட்டில் ரப்பரின் விலை அதிகரிக்கும். இது ரப்பா் விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்றாா்.
ரப்பா் வாரிய உறுப்பினா் விஸ்வநாதன் கூறுகையில், ரப்பா் வாரிய செயல்பாட்டிற்காக பட்ஜெட்டில் ரூ. 268.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரப்பா் விவசாயிகளுக்கும், ரப்பா் தோட்டத் தொழிலாளா்களுக்கும் கூடுதல் நல உதவிகள் கிடைக்கும் என்றாா்.