கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. அந்த மழை வெள்ளிக்கிழமையும் நீடித்தது. அதிகபட்சமாக, நாகா்கோவிலில் 14 மில்லி மீட்டா் மழையளவு பதிவானது. மழையின் காரணமாக அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. நாகா்கோவில் அருகேயுள்ள குமரி அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.
களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பிற்பகல் 2.30 மணியளவில் முதல் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. மாா்த்தாண்டம், குழித்துறை, படந்தாலுமூடு பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேல் பரவலாக மழை பெய்தது.