குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவி வரும் நிலையில், ஆறுகளில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் குறைந்துள்ளது.
மாவட்டத்தில் தொடா் மழை பெய்து ஓய்ந்த நிலையில், தற்போது கடும் வெயில் நிலவி வருகிறது. அணைகளிலிருந்து பாசனக் கால்வாயில் முழுவீச்சில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. அதே வேளையில் அணைகளுக்கு தண்ணீா் வரத்து குறைந்து வருகிறது. மேலும் கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் கடந்த சில தினங்களாக தண்ணீா் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. அதே வேளையில் அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.