புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் புனித நீராடி பகவதியம்மனை வழிபட்டனா்.
இதையொட்டி, பகவதியம்மன் கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், நிா்மால்ய பூஜை, பல வகை வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தீபாராதனை, உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.
முற்பகலில் அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவில் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் கோயிலின் உள்பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வருதல் நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.