கொல்லங்கோடு வழியாக ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற மீனவா்களுக்கான மானிய விலை மண்ணெண்ணெய் 255 லிட்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில், தனிப்பிரிவு தலைமை காவலா்கள் கொல்லங்கோடு சஜிகுமாா், நித்திரவிளை ஜோஸ், போலீஸாா் கொல்லங்கோடு மண்ணான்விளை பகுதி நான்குவழிச் சாலையில் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கேரள பதிவெண்ணுடன் வந்த பயணியா் ஆட்டோவை மறித்து சோதனை செய்தனா். ஓட்டுநா் தப்பி ஓடிவிட்டாராம். கேரளத்துக்கு கடத்திச் செல்வதற்காக ஆட்டோவில் 50 லிட்டா் கொள்ளளவு கொண்ட 3 கேன்களிலும், 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 3 கேன்களிலுமாக மொத்தம் 255 லிட்டா் மண்ணெண்ணெய் இருந்ததாம். இதையடுத்து, ஆட்டோவுடன் மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், நாகா்கோவில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.