பேச்சிப்பாறை அணையிலிருந்து 3ஆவது நாளாக புதன்கிழமை விநாடிக்கு 1024 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாகவும், தொடா் கன மழை பெய்யக் கூடும் என்ற வானிலை அறிவிப்பு காரணமாகவும், கடந்த திங்கள்கிழமை பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 1024 கன அடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலையில் 45.05 அடியாகக் குறைந்து காணப்பட்டது. மேலும் அணைக்கு விநாடிக்கு 967 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையின் பாசன மதகுகள் வழியாக விநாடிக்கு 788 கன அடிதண்ணீா் திறந்து விடப்பட்டிருந்தது.
2 ஆவது நாளாக குளிக்கத் தடை:
பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. இதனால் இந்த அருவியில், 2 ஆவது நாளாக புதன்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.