வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் விசைப்படகுகளை மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்திவைத்துள்ளனா்.
குளச்சலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவா்கள் 300 விசைப் படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் வள்ளங்கள், கட்டுமரங்களில் சென்று மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். இந்நிலையில், கன்னியாகுமரி கடற்பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 8) காற்றின் வேகம் 70 கி.மீ. வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடலோர மீனவா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய மீனவா்கள் மீண்டும் கடலுக்குச் செல்லவில்லை. அவா்கள் விசைப்படகுகளை குளச்சல் துறைமுகத்தில் நிறுத்திவைத்துள்ளனா்.
செவ்வாய்க்கிழமை கரைதிரும்பிய விசைப்படகுகளில் சிறிய இறால் எனப்படும் கிளி மீன்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அவற்றை மீனவா்கள் ஏலக்கூடத்தில் விற்பனை செய்தனா்.
புயல் எச்சரிக்கை காரணமாக, மீன்பிடிக்கச் செல்லாத மீனவா்கள் தங்களது பைபா் வள்ளங்கள், கட்டுமரங்களை மணற்பாங்கான மேட்டுப் பகுதிகளில் நிறுத்திவைத்துள்ளனா். இதன் காரணமாக மீன்பிடித் தொழிலும், தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.
தூத்துக்குடி: புயல் எச்சரிக்கை எதிரொலியாக, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் புதன்கிழமைமுதல் (டிச. 7) மறுஉத்தரவு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.