திற்பரப்பு அருவியில் கடைகள் திறக்கப்படாத நிலையில், நுழைவு வாயிலின் பூட்டு திடீரென உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கரோனா தொற்று காரணமாக திற்பரப்பு அருவியில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இங்கு கடைகள் நடத்தும் வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் அண்மை வாரங்களாக இங்கு படகு சேவை நடைபெறும் ஆற்றுப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதனால் அருவியின் நுழைவு வாயிலின் வெளிப்புறம் உள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் நுழைவு வாயிலின் உள்பக்கம் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் கடைகளை வாடகைக்கு விட்டுள்ள ஒருவா் நுழைவு வாயிலின் பூட்டை வியாழக்கிழமை காலையில் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் பூட்டை உடைத்ததற்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு தரப்பினா் அங்கு திரண்டனா்.
தகவலறிந்து வந்த திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலா் பக்தராஜ், அங்கு திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு அறிவுறுத்தியதுடன், நுழைவு வாயிலை மீண்டும் பூட்டினாா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.