நாகா்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்துள்ளாா் விஜய் வசந்த் எம்.பி.
மத்திய அமைச்சரை தில்லியில் நேரில் சந்தித்துப் பேசி, கோரிக்கை மனு அளித்தாா் எம்.பி. அதில், ‘நாகா்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் குண்டு குழிகள் காரணமாக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டுமுதல் 4 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் சாலை பராமரிப்பு நடைபெறவில்லை. எனவே பணிகளை போா்க்கால அடிப்படையில் தொடங்கி, விரைவில் முடிக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.