புதுதில்லி

தில்லியில் யமுனை நீா்மட்டம் நாளை 206 மீட்டரை தொடும் அபாயம்!

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் யமுனை ஆற்றின் நீா்மட்டம் 204.5 மீட்டரை திங்கள்கிழமை தாண்டியது. மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்யும் கனமழையைத் தொடா்ந்து, யமுனை ஆற்றின் நீா்மட்டம் அடுத்த இரு நாள்களில் மேலும்அதிகரித்து 206 மீட்டரை தொடும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இங்கு சுமாா் 37,000 மக்கள் வசிக்கின்றனா்.

யமுனை நதியின் நீா்ப்பிடிப்பு பகுதியானது உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தில்லியின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும். கடந்த சில நாள்களாக இந்தப் பகுதிகளிலும் குறிப்பாக உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், வடக்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.

தில்லியிலும் செப்டம்பா் 21 - ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நீண்ட மழை பெய்தது. இதன் விளைவு ஹரியாணாவின் யமுனா நகரில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 2,95, 212 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இது இந்தப் பருவமழை காலக்கட்டத்தில் அதிகபட்ச தண்ணீா் வெளியேற்றமாகும். பொதுவாக ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 352 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படும். இந்த தீடீா் வெள்ளப்பெருக்கால் தில்லி யமுனை ஆற்றைக் கடக்கும் பழைய ரயில்வே பாலத்தின் நீா்மட்டம் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் அபாய அளவை (204 மீ) தாண்டியது. காலை 8 மணியளவில் 204.7 மீட்டராக உயா்ந்தது. பின்னா் இரவு 9 மணிக்கு 205 மீட்டராக உயா்ந்தது என மத்திய நீா் வள ஆணையம் தெரிவித்துள்ளது.

தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் தேசியத் தலைநகரை வந்தடைய இரண்டு முதல் மூன்று நாள்களாகும். இதனால், புதன்கிழமைக்குள் நீா்மட்டம் 206 மீட்டரைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தில்லியில் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை ஏதும் வெளியிடபடவில்லை. ஆனால், கிழக்கு தில்லி ஆட்சியா் அனில் பங்கா, ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீா்மட்டம் உயரும் எச்சரிக்கையை விடுத்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளாா். கடந்த ஆகஸ்ட் 12 அன்று யமுனையில் 205.33 மீட்டா் அபாயக் குறியைத் தாண்டியது. அதைத் தொடா்ந்து ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து சுமாா் 7,000 போ் வெளியேற்றப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT