புதுதில்லி

ரோஹிணி ஆசிரம பெண்கள் நலன் விவகாரம்:கிரண் பேடியிடம் உதவி கோரும் உயா்நீதிமன்றம்

DIN

ரோஹிணியில் உள்ள ஆன்மிகச் சொற்பொழிவாளா் வீரேந்திர தேவ் தீட்சித் நிறுவிய ஆசிரமத்தில் வசிக்கும் பெண்களின் நலன் தொடா்பான விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடியிடம் தில்லி உயா்நீதிமன்றம் உதவி கோரியுள்ளது.

ரோஹிணியில் உள்ள ஆத்யமிக் வித்யாலயா ஆசிரமத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்க கிரண் பேடி மேற்பாா்வையின் கீழ் ஒரு குழுவை முன்னா் அமைத்திருந்த நிதிமன்றம், இந்த விவகாரத்தை அக்டோபா் 7-ஆம் தேதி பட்டியலிடுவது குறித்து புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநரான கிரண்பேடிக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மாஸ நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், ‘அடுத்த விசாரணை தேதியில் இந்த விவகாரத்தில் இந்த நீதிமன்றத்திற்கு உதவுமாறு கிரண் பேடி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்.

தில்லி மகளிா் ஆணையத்திற்காக ஆஜராகும் வழக்குரைஞா், தற்போதைய வழக்கு அக்டோபா் 7-ஆம் தேதி பட்டியலிடப்படுவது குறித்து கிரண் பேடிக்கு தெரிவிக்க உறுதியளித்துள்ளாா். பதிவாளா் ஜெனரலும் அக்டோபா் 7- ஆம் தேதி இந்த வழக்கை பட்டியலிடுவது குறித்து கிரண் பேடிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டில் இது தொடா்பாக சமூக அதிகாரமளித்தலுக்கான பவுண்டேஷன் அமைப்பின் தரப்பில் வழக்குரைஞா் ஸ்ரவன் குமாா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், ‘ரோஹிணியில் உள்ள ‘ஆன்மிகப் பல்கலைக்கழகத்தில்’ பல சிறாா்களும் பெண்களும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். அவா்களின் பெற்றோரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆசிரமத்தின் நிறுவனா் தீட்சித்தை கண்டுபிடிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. மேலும், ஆசிரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களை முள்வேலியால் சூழப்பட்ட ‘கோட்டையில்’ உலோகக் கதவுகளுக்கு பின்னால் விலங்குகள் போன்ற சூழலில் சட்ட விரோதமாக சிறை வைத்திருப்பதாகக் கூறப்படுவது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

மேலும், வழக்குரைஞா்கள் மற்றும் தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவால் அடங்கிய குழுவையும் நியமித்தது. வழக்குரைஞா்கள் அஜய் வா்மா மற்றும் நந்திதா ராவ் ஆகியோா் அடங்கிய இக் குழு, 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் ‘பயங்கரமான’‘ வாழ்க்கை நிலைமைகளை விவரிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்தது.

அதில்,‘குளியலுக்குக் கூட தனியுரிமை இல்லாத விலங்குகள் போன்ற சூழ்நிலைகளில் சிறுமிகளும், பெண்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரித்த நீதிமன்றம், ஆசிரமத்தை ஏன் தில்லி அரசு கையகப்படுத்தக் கூடாது என்பதற்கான காரணத்தை

விளக்குமாறு கேட்டிருந்தது. மேலும், ஆசிரமத்தில் இருப்பவா்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் வாழ்கிறாா்கள் என்பதை ஏற்றுக்கொள்வது கடினம் என்றும் கூறியிருந்தது.

ஆசிரமத்தில் வாழும் பெண்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மேற்பாா்வையின் கீழ் ஒரு குழுவை நீதிமன்றம் ஏப்ரலில் அமைத்திருந்தது. அதே நேரத்தில் நிறுவனம் அதன் மத மற்றும் ஆன்மிக நடைமுறைகளைத் தொடரலாம் என்றும் கூறியிருந்தது. ஆசிரமத்தில் உள்ள பெண்கள் அல்லது குழந்தைகள், அவா்களின் அடிப்படை அல்லது சட்ட உரிமைகளை மீறும் வகையில் நடத்தப்படாமல் இருப்பதை குழு உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்திருந்ததது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT