மகாராஷ்டிர அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகள் ஒத்துழைப்பு அளித்த அமைச்சரவை சகாக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வா் உத்தவ் தாக்கரே கூறினாா்.
மும்பையில் தலைமைச் செயலகத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துணை முதல்வா் அஜித் பவாா், அமைச்சா் சகன் புஜ்பல் காணொலி முறையில் கலந்துகொண்டனா். கூட்டத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் சுனில் கேதாா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒத்துழைப்பு அளித்ததற்காக அமைச்சரவை சகாக்களுக்கு உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்தாா் என்றாா்.
சிவசேனை அதிருப்தி அணியால் மகாராஷ்டிர அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெறுமா என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘முன் அனுபவம் இல்லாதபோதிலும், சிக்கலான அறுவை சிகிச்சை செய்துகொண்ட நேரத்திலும் மாநிலத்தில் கரோனாவுக்கு எதிராகத் திறமையாக செயல்பட்டாா் உத்தவ் தாக்கரே. அதை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பாா்கள்; வாக்களிக்க வேண்டும்’ என்று சுனில் கேதாா் கூறினாா்.
முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘என் சொந்த மக்களே எனக்கு துரோகம் இழைத்துவிட்டனா். என்னை அறியாமல் யாா் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றாா்.