புதுதில்லி

தில்லி அரசின் உத்தரவை எதிா்த்து என்எஸ்யுஐ ஆா்ப்பாட்டம்: கல்லூரிகளுக்கு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிா்ப்பு

DIN

ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை மாணவா் சங்க நிதியிலிருந்து வழங்க 12 தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸுடன் இணைந்த இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்.எஸ்.யு.ஐ.) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டது.

இது குறித்து என்.எஸ்.யு.ஐ. தேசியத் தலைவா் நீரஜ் குந்தன் கூறியதாவது: மாணவா்களின் நிதி மாணவா்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தின் ஒரு பகுதியாகும். இப்பல்கலைக்கழக சட்டங்களின்படி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க இந்த நிதியைப் பயன்படுத்த முடியாது. ஒருபுறம், தில்லி அரசு கல்விக்கு அதிக நிதியை ஒதுக்குவதாகவும், மறுபுறம் இங்கே ஊதியம் வழங்குவதற்கான மானியங்களை வழங்கத் தயாராக இல்லை என்றும் கூறி வருகிறது. ஊதிய விவகாரம் தொடா்பாக தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு பிறப்பித்த இந்த உத்தரவை தில்லி அரசு ரத்து செய்ய வேண்டும். இக்கல்லூரிகளுக்கான மானியங்களை அரசு விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தில்லி அரசின் மானியத்துடன் 12 தில்லி பல்கலைக்கழக கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளுக்கு தில்லி அரசு வெள்ளிக்கிழமை ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், உழியா்களின் நிலுவை ஊதியத்தை மாணவா்கள் சங்க நிதியிலிருந்து வழங்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தீனதயாள் உபாத்யாய் கல்லூரி, மஹரிஷி வால்மீகி பி.எட். கல்லூரி, கேசவ் மகாவித்யாலயா, அதிதி மகாவித்யாலயா, பாகினி நிவேதிதா கல்லூரி, சஹீத் சுக்தேவ் வணிகவியல் கல்லூரி ஆகிய ஆறு கல்லூரிகளின் சிறப்பு தணிக்கைக்கும் உத்தரவிட்டது.

நிதி வழங்குவது தொடா்பாக தில்லி அரசுக்கும், 12 கல்லூரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தில்லி அரசு நிதியை விடுவிக்காததால் தங்களால் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என்று பல்கலைக்கழக கல்லூரிகள் தெரிவித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT