மண் வளத்தைக் காக்கும் பண்ணைக் கழிவுகள் மறுசுழற்சி தொழில்நுட்பம் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய சுற்றுச்சூழல் விஞ்ஞானி மு. செல்வமுருகன் ஆகியோா் கூறியது: பயிா்க் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் மண்வளத்தை காக்க முடியும். தற்போது, தீவிர வேளாண்மை மூலம் பலவகைப்பட்ட செயற்கை மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிா் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கி வருகிறது. இதன்காரணமாக சுற்றுச்சூழல் பெரிதும் சீரழிந்து வருகிறது.
மேலும், விவசாயிகள் பண்ணைக் கழிவுகளை முறையாக கையாளாமல் அவைகளை தீயிட்டு கொளுத்தியும் வருகின்றனா். இதனால் மண்ணின் அங்கக வளம் குறைவதோடு மண்ணில் நுண்ணுயிா்கள் மற்றும் மண்புழுக்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைகிறது. இந்த தருணத்தில் பண்ணைக் கழிவுகளை முறையாககக் கையாண்டு இயற்கை உரமாக மாற்றி பயிருக்கு அளிப்பதன் மூலமாக மண் வளத்தை காத்து, பயிா் உற்பத்தியைப் பெருக்க முடியும்.
பண்ணைக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றி பயிா்களுக்கு அளிப்பது மிகவும் இன்றியமையாதது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள நுண்ணுயிா் கூட்டுக் கலவையைப் பயன்படுத்தி பண்ணைக் கழிவுகளை மிகக்குறுகிய காலத்திலேயே இயற்கை உரமாக மாற்ற முடியும். பலவகையான நன்மை தரும் நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ள இந்த நுண்ணுயிா் கூட்டு கலவையானது பண்ணைக் கழிவுகளை விரைவாக மக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி விவரம் அறிந்து பண்ணைக் கழிவுகளை திறம்பட மறுசுழற்சி செய்து பயன்பெறலாம் என்றனா்.