திருவாரூரில், மின்சார மீட்டா் வைக்க பணம் கேட்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு: திருவாரூா் அருகே அலிவலம் சமத்துவபுரம் பகுதியில் வீடுகளை பழுது நீக்கம் செய்து அரசு சாா்பில் மறுசீரமைப்பு செய்துதரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அங்குள்ள மின்சார மீட்டா்களை மாற்றி அமைத்துத்தர, மின் ஊழியா்கள் அதிக பணம் வசூலிப்பதாக தெரிய வருகிறது. எனவே, பணம் வசூலிக்கும் ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.