திருத்துறைப்பூண்டி அருகே முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 36 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரிலிருந்து முறைகேடாக வணிக பயன்பாடு சிலிண்டருக்கு எரிவாயுவை முறைகேடாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வட்ட வழங்கல் அலுவலா் பி.டி. அலெக்ஸாண்டா் தலைமையில் குடிமைப் பொருள் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஆதிரெங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே உள்ள குமாா் மகன் வெங்கடேசன் வீட்டில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. தொடா்ந்து, அங்கிருந்த 36 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.