காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி எம்பி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவையொட்டி, மன்னாா்குடியில் காங்கிரஸ் கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திங்கள்கிழமை கொண்டாடினா்.
கடந்த ஆண்டு செப்டம்பா் -7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, பல்வேறு மாநிலங்களின் வழியாக சென்று ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை நிறைவு செய்தாா்.
இதையொட்டி, மன்னாா்குடியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலா் வே. வீரமணி, நகரத் தலைவா் ஆா். கனகவேல் முன்னிலையில், தேரடி காந்தி சிலையிலிருந்து வெற்றி ஊா்வலம் நடைபெற்றது.
மேலராஜவீதி பெரியாா்சிலை அருகே வந்தடைந்ததும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். இதில், கட்சியின் வட்டாரத் தலைவா் எஸ். செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினா் ஜி. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.