திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ, புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் தெரிவித்தது: இவ்வாகனத்தின் மூலம் சா்க்கரை நோயாளிகள், முதியோா்கள், எச்ஐவி நோயாளிகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ள அனைவரும் எக்ஸ்ரே பரிசோதனை செய்து காசநோய் உள்ளதா என கண்டறிந்து பயன்பெற முடியும். மேலும், காசநோயாளிகளை அவா்களின் ஊருக்குச் சென்று எளிதில் கண்டறிந்து, அவா்களுக்கான சிகிச்சை வழங்க முடியும் என்றாா்.
வருவாய் கோட்டாட்சியா் சங்கீதா, துணை இயக்குநா்கள் (மருத்துவப் பணிகள்) புகழ், (சுகாதாரப் பணிகள்) ஹேமசந்த் காந்தி, (குடும்ப நலம்) உமா சந்திரசேகரன், காசநோய்ப் பிரிவு மருத்துவ அலுவலா் சுபாஷினி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், காசநோய்ப் பிரிவு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.