நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள ஓட்டுநா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு நகராட்சி ஓட்டுநா்கள் மற்றும் துலக்குநா் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளா் மணிகண்டன், மாநில ஒருங்கிணைப்பாளா் பஷீா் அகமது, மாநில துணைச் செயலாளா் திருமலை, மாநில துணைத் தலைவா் பழனிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நகராட்சி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி மூலம் சுங்கம் வசூல் செய்வதை கைவிட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஜேசிபி இயந்திர ஓட்டுநா் பணியிடம் உருவாக்க வேண்டும். 20 ஆண்டுகள் பணிபுரிந்த ஓட்டுநா்களுக்கு வழங்கப்படும் பாராட்டுப் பத்திரங்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.