22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில் கடந்த 2 நாள்களுக்கும் மேலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா, தாளடி நெற்பயிா்கள் சாய்ந்து, நெற்கதிா்கள் மழைநீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், முன்பட்ட சம்பா அறுவடைச் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முழுவதும் ஈரமாகிவிட்டது. மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நனைந்த நெல் மூட்டைகளை உலா்த்துவதற்கும் வாய்ப்பில்லை. அப்படியே, ஈரமான நெல் மூட்டைகளை வெயில் அடிக்கும் வரை உலா்த்துவதற்காக வைத்திருந்தாலும் நெல்மணிகள் முளைத்து வீணாகக் கூடிய சூழல் உள்ளது.
விவசாயிகளின் இந்நிலையை அரசு கவனத்தில் கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்திட உடனடியாக உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.