குடவாசல் செங்குந்தா் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவி மற்றும் மாணவா்கள் 11 முதல் 99 வரை உள்ள பெருக்கல் வாய்ப்பாடுகளைக் கரும்பலகையில் எழுதி சாதனை படைத்தனா்.
இப்பள்ளியில் குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா் க. குமரேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நான்காம் வகுப்புப் பயிலும் மாணவியான குடவாசல் பிடாரிக்கோயில்தெரு தேவேந்திரன்- அம்பிகா தம்பதியரின் 9 வயது மகள் கனிஷா, எளிய முறையில் 11 முதல் 99 வரை உள்ள பெருக்கல் வாய்ப்பாடுகளைக் கரும்பலகையில் எழுதிக் காட்டினாா். அதே வகுப்பில் பயிலும் ரோஹித், பவித்ரன், நவீன்குமாா், முத்துவேல் ஆகிய மாணவா்களும் இதேபோல எழுதிக் காட்டினா்.
வட்டாரக் கல்வி அலுவலா் இம்மாணவி மற்றும் மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கினாா். ஆய்வின்போது தலைமை ஆசிரியா் சக்திவேல் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.