வலங்கைமான் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள கருப்பூரை சோ்ந்தவா் வாசுதேவன், அதிமுக பிரமுகா். இவா், வலங்கைமான் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவராக உள்ளாா். இவரது மகன் சரவணன் (16) வலங்கைமானில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் பிளஸ் 1-இல் சேர விண்ணப்பித்திருந்தாா்.
இந்நிலையில், சரவணன் தன்னுடன் பயின்ற நண்பா்கள் 4 பேருடன் புதன்கிழமை மதியம் அருகில் உள்ள குடமுருட்டி ஆறு மதகு (சட்ரஸ்) அருகே குளிக்கச் சென்றுள்ளாா். இதில் சரவணன் மற்றும் வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெரு சசிகுமாா் மகன் ராகவேந்தா் (16) இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.