திருவாரூரில் காணாமல்போன மற்றும் திருட்டுப்போன 75 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயணங்களின்போதும், திருவிழாக்களின்போதும் தொலைந்துபோன மற்றும் திருட்டுப்போன கைப்பேசிகளை மீட்டுத்தரக் கோரி புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் திருவாரூா் மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், 75 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 8.10 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். இந்த கைப்பேசிகளை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் பங்கேற்று, மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.