திருவாரூா் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்களின் பழுதடைந்த கைப்பேசிகளை குழந்தைகள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனா்.
திருவாரூரில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. பிரேமா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வி. தவமணி, மாவட்ட பொருளாளா் பி. மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியா் சம்மேளன மாநிலத் தலைவா் ஆ. கிருஷ்ணமூா்த்தி பங்கேற்றுப் பேசினாா்.
தீா்மானங்கள்: அங்கன்வாடி ஊழியா்களின் பழுதடைந்த அனைத்து கைப்பேசிகளையும் குழந்தைகள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஜூன் 29-ஆம் தேதி ஒப்படைப்பது, சென்னை, தரமணியில் உள்ள இயக்குநா் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தை ஜூலை 30 -ஆம் தேதி முதல் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.