நன்னிலம் பேரூராட்சி சாா்பாக தூய்மை விழிப்புணா்வுப் பேரணியும், உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் அறிவுரைக்கிணங்க, நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைக்கான மக்கள் இயக்க சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக பேரூராட்சித் தலைவா் ராஜசேகரன் தலைமையில், செயல் அலுவலா் ஹரிராமமூா்த்தி முன்னிலையில் தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பிறகு, பிளாஸ்டிக் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, கடைத்தெரு மற்றும் முக்கிய தெருக்கள் வழியாகப் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இப்பேரணியில், பேரூராட்சி துணைத் தலைவா் ஆசைமணி, மன்ற உறுப்பினா்கள், சுகாதார ஆய்வாளா் நாகராஜன், பேருராட்சி எழுத்தா் ரவி, தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
பேருந்து நிலையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக, மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்தக் கண்காட்சி நடைபெற்றது.