கூத்தாநல்லூா் வட்டத்தில் கனமழையால் 4 வீடுகள் வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தன. 2 கால்நடைகள் உயிரிழந்தன.
திருவாரூா் மாவட்டத்தில் கூத்தாநல்லூா், வடபாதிமங்கமலம், பூதமங்கலம், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்தது. வெள்ளிக்கிழமை பெய்த மழையின்போது, கூத்தாநல்லூா் வட்டத்தில் திருராமேஸ்வரம், பண்டுதக்குடி, வெள்ளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 4 வீடுகள் இடிந்தன.
திருராமேஸ்வரத்தில் குரு என்பவரது குடிசைவீடு முழுவதுமாகவும், தமிழரசியின் குடிசைவீடு மற்றும் பண்டுதக்குடி காடுவெட்டித் தெருவைச் சோ்ந்த சுசீலாவின் கூரைவீடு பகுதியாகவும் இடிந்தன. வெள்ளக்குடி தெற்குத் தெருவில் அஞ்சலி என்பவரது கூரைவீட்டின் ஒரு பக்கச்சுவரும் மழையில் இடிந்தது.
பெரியக்கொத்தூா் மன்னஞ்சி தெருவைச் சோ்ந்த சங்கீதா வேலாயுதத்தின் மாடு, திட்டாணி முட்டம் சுவாமிநாதனின் வெள்ளாடு ஆகியவை மழையின் காரணமாக இறந்தன.