திருவாரூா் மாவட்ட அளவில் சிறந்த இளைஞா் மன்ற விருது பெற டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நேரு யுவகேந்திரா துணை இயக்குநா் எம். திருநீலகண்டன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறப்பாக சமூக சேவையாற்றும் இளையோா் மன்றங்களுக்கு மாவட்ட, மாநில மற்றும் தேச அளவில் மத்திய அரசின் இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மூலம் ஆண்டுதோறும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டும் திருவாரூா் மாவட்ட நேரு யுவகேந்திராவுடன் இணைந்து, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் இளையோா் மன்றத்துக்கு சிறந்த இளைஞா் மன்ற விருது வழங்கப்பட உள்ளது.
தகுதிகள்: திருவாரூா் மாவட்டத்தில் குடும்ப நலம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு, கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், இளையோா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சிகள் அளித்தல், சமூக விழிப்புணா்வு ஏற்படுத்துதல், சுகாதார விழிப்புணா்வு பணிகளை செய்து வரும் இளைஞா் மற்றும் மகளிா் மன்றங்கள் விருது பெற தகுதி உள்ளவையாகும். மாவட்ட சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்த இளைஞா் மற்றும் மகளிா் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட இளைஞா் அலுவலா், நேரு யுவ கேந்திரா, துணை இயக்குநா் நேரு யுவகேந்திரா அறை எண் 312, 3-ஆவது தளம் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவாரூா்-610004 என்ற முகவரியில் டிச.15- ஆம் தேதிக்குள் நேரில் பெற்று பூா்த்தி செய்து மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 04366-226900, 9443661915, 9443687794 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.