நீடாமங்கலம் அருகே மழையின் காரணமாக நெல்கொள்முதல் நிலையம் இடிந்து விழுந்தது.
நீடாமங்கலம் அருகேயுள்ள அய்யம்பேட்டையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் புதிதாக கட்டப்பட்டது. இந்நிலையில், தற்போது பெய்துவரும் சிறு மழைக்கு கூட இந்த நெல் கொள்முதல் நிலையம் தாக்குபிடிக்க முடியாமல் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கட்டுமானம் உறுதியாக செய்யப்படாததால் தற்போது இடிந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டடப் பகுதியில் அரசு ஊழியா்கள், விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளா்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். எனினும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கொள்முதல் நிலையம் பூட்டிய நிலையில் இருந்ததால் யாரும் பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில், அய்யம்பேட்டை, செட்டிசத்திரம், முன்னாவல்கோட்டை ஒரு பகுதி, சோனாப்பேட்டை, சிக்கப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 1,000 ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்துள்ள நெல் அறுவடை செய்து அய்யம்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குதான் கொண்டுவர வேண்டும். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.