திருவாரூா் அருகே தேசியக் கொடி ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் சேதமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டத்தில் அம்ரித்சரோவா் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் குளங்கள் அமைக்கப்பட்டு அனைத்து குளங்களின் ஓரங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் கொடி மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, திருவாரூா் அருகே புலிவலம் தாமரை குளத்தின் அருகில் திருவாரூா் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் புதியதாக கொடிமேடை மற்றும் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
திங்கள்கிழமை காலை அந்த இடத்துக்கு வந்த அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் மற்றும் கொடி மேடை உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து திருவாரூா் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.