நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் 9 ஆம் ஆண்டு சா்க்கரை திருப்பாவாடை விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இங்கு, சிவபெருமான் சித்தா் வேஷம்பூண்டு ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கம் விளையாடி வெற்றி பெற்று அவரை திருமணம் செய்துகொண்டதாக தலவரலாறு. இதையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது.
அம்மனுக்கு சா்க்கரைப்பொங்கல் படைக்கப்பட்டு, அதில் நெய் நிரப்பப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் அம்மனை நெய்க்குள தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் எஸ். மாதவன், செயல் அலுவலா் பி. பிரபாகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.