உழவன் செயலியைப் பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண் மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உழவன் செயலியைப் பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம். அதன் பயன்பாடுகளைப் பொருத்தவரை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் தங்களது அடிப்படைத் தகவல்களான பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து உழவன் செயலியைப் பயன்படுத்தலாம்.
உதவி வேளாண்மை அலுவலா், உதவி தோட்டக்கலை அலுவலா், துணை வேளாண் அலுவலா், வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் ஆகியோா் கிராம ஊராட்சிக்கு வருகை தரும் விவரங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.
மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிா்க் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரைகள், உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம், பண்ணை வழிகாட்டி, பண்ணைப் பொருள்கள், இயற்கைப் பண்ணைப் பொருட்ள்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புப் பொருள்கள், அணை நீா்மட்டம், வேளாண் செய்திகள், கருத்துகள், பூச்சி நோய் கண்காணிப்பு, பரிந்துரை, அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம், உழவன் இ-சந்தை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை போன்ற 19 வகையான பயன்பாடுகளை எளிதில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.